குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: சென்னை டாக்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு


குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: சென்னை டாக்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 30 Dec 2018 11:30 PM GMT (Updated: 30 Dec 2018 10:47 PM GMT)

குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து சமீபத்தில் மரணமடைந்த சென்னை டாக்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த பிரபல டாக்டர் ஜெயச்சந்திரன் பல ஆண்டுகளாக நோயாளிகளுக்கு 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார். கடந்த 19-ந் தேதி மரணமடைந்த அவருக்கு ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் (மன் கீ பாத்) என்ற பெயரில் வானொலி மூலம் உரையாற்றி வரும் அவர், நேற்றைய உரையில் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார்’ என்று புகழாரம் சூட்டினார்.

இந்த ஆண்டின் கடைசி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியான இந்த உரையில், 2018-ம் ஆண்டில் இந்தியா சாதித்த பல்வேறு சாதனைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை 2018-ல் இந்தியா தொடங்கி இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் சென்று சேர்ந்திருக்கிறது. வறுமை ஒழிப்பில் இந்தியா சாதனை படைத்து வருவதாக பல்வேறு உலக நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளன.

சர்தார் வல்லபாய் படேலை கவுரவிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சிலை திறக்கப்பட்டு உள்ளது. மேலும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைப்போருக்கு சர்தார் படேல் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது, பூமி சாம்பியன் விருது போன்றவை இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

நாட்டின் தற்காப்பு நடைமுறைகள் வலுவாக்கப்பட்டு இருக்கிறது. அணுசக்தியில் இயங்கும் நீர் மூழ்கி கப்பலை இயக்கி இருப்பதன் மூலம் தற்போது முப்படைகளிலும் அணுசக்தி திறன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதித்து உள்ளது.

இந்த சாதனைகள் 2019-லும் தொடரும் என உறுதியாக நம்புகிறேன். எதிர்மறையான தகவல்களை பரப்புவது எளிது. ஆனால் நேர்மறையான கருத்துகளை பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு இணையதளங்கள் நேர்மறையான தகவல்களை வேகமாக பரப்பி வருகின்றன. இவற்றில் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story