ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்


ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்
x
தினத்தந்தி 2 Jan 2019 9:00 PM GMT (Updated: 2 Jan 2019 7:39 PM GMT)

ரபேல் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும், அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறி கடந்த மாதம் 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

மூடி முத்திரையிடப்பட்ட கவரில், கையெழுத்து இடாமல் அரசு வழங்கிய தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த சீராய்வு மனு மீதான விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் 3 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story