வன்முறை எதிரொலி: 750 பேர் கைது; கேரளாவில் பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு


வன்முறை எதிரொலி:  750 பேர் கைது; கேரளாவில் பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:46 AM GMT (Updated: 4 Jan 2019 3:46 AM GMT)

கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.

சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.

இந்த போராட்டம் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கி தொடர்ந்து 12 மணிநேரம் நடந்தது.  இந்த போராட்டத்தினை தொடர்ந்து பல இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

கோழிக்கோட்டில் நேற்று காலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், டயர்களை தீ வைத்து எரித்தும் உள்ளனர் என தகவல் வெளியானது.  

சாலைகளில் டயர்களை எரித்தும், கிரானைட் கற்களை கொண்டு தடை ஏற்படுத்தியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் பல இடங்களில் கடைகளின் ஷட்டர்களை இறக்கி வலுக்கட்டாயமாக மூடினர். சில கடைகள் அடித்தும் நொறுக்கப்பட்டன.

இதேபோன்று மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

நேற்று மாலைவரை, வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர்.  இதுவரை 750 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்திருந்தது.  ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நேற்று கருப்பு நாளாக கடைப்பிடித்தது.

கேரளாவில் கேரள, மகாத்மா காந்தி, காலிகட் மற்றும் கண்ணூர் ஆகியவை உள்பட பல்வேறு பல்கலை கழகங்களில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Next Story