சபரிமலை விவகாரம்: கேரளாவில் எம்.எல்.ஏ. வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; 20 பேர் கைது


சபரிமலை விவகாரம்:  கேரளாவில் எம்.எல்.ஏ. வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; 20 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2019 3:29 AM GMT (Updated: 5 Jan 2019 3:33 AM GMT)

சபரிமலை விவகாரத்தில் கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் சமீபத்தில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.

சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளாவில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், டயர்களை தீ வைத்து எரித்தும் உள்ளனர் என தகவல் வெளியானது.

இந்த வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர்.  750 பேர் கைது செய்யப்பட்டனர்.  வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் நகரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஷம்சீர் வீடு மீது நேற்றிரவு 10.15 மணியளவில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.  இதுபற்றி, வன்முறையை தூண்டிவிட ராஷ்டீரிய சுவயம்சேவக் சங்க அமைப்பினர் திட்டமிட்ட சதியிது என ஷம்சீர் ஊடகங்களிடம் கூறினார்.  வன்முறையை உருவாக்கி அமைதியான சூழ்நிலையை ஒழிப்பதே அவர்கள் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

இதன்பின்னர் சில மணிநேரங்கள் கழித்து நடந்த பதில் தாக்குதலில், கண்ணூர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் வீடு மீது வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.  இதில் யாரும் காயமடையவில்லை.

இதேபோன்று தலச்சேரி பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி. சசி வீடு மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்றனர்.

இந்த நிலையில், ஷம்சீர் வீடு மீது நாட்டு வெடிகுண்டை வீசிய விவகாரத்தில் போலீசார் 20 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story