திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்


திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2019 3:22 AM GMT (Updated: 7 Jan 2019 3:22 AM GMT)

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைய இருந்தது. 

இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆளும் அ.தி.மு.க. இன்று வேட்பாளரை அறிவிப்பதாக அறிவித்து இருந்தது. 

இதற்கு மத்தியில்,திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

தேர்தல் ஆணையம் விளக்கம்

இந்த சூழலில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:- “ திருவாரூர் தவிர மற்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசிடம் கருத்து கேட்க உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியிருந்தது. நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் அறிக்கை அளித்து இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story