நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2019 9:03 AM GMT (Updated: 7 Jan 2019 9:03 AM GMT)

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பதிலளித்து பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார். நிர்மலா சீதாராமன் கூறியிருக்கும் இந்த ரூ.1 லட்சம் கோடியில் ஒரு காசு கூட எங்களுக்கு வரவில்லை என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக இந்த நிறுவனம் முதல் முறையாக ரூ.1000 கோடி கடன் வாங்கியிருப்பதாகவும் ஊடகங்களில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது.

இதனையடுத்து  பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பொய் உரைக்கிறார் என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கியதற்கான ஆவணங்களை நாளை (இன்று) ராணுவ மந்திரி நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,  ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.26,570.80 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. மேலும் ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன’ என்றார். 

இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், “பாதுகாப்புத்துறை அமைச்சர் முதலில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு ரூ. 26,570.80 கோடிக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பொய் சொல்கிறார். என்னுடைய கேள்வியை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். “ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்களா?” பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும். ஆம் அல்லது இல்லையென பதிலளியுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். 

Next Story