தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் - கேரளா, மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல்


தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் - கேரளா, மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 8:48 PM GMT)

தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் காரணமாக, கேரளா மற்றும் மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் 2 நாள் பொது வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர். கேரளா, மேற்குவங்காளத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தன.

முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்தன. அதன்படி நாடு முழுவதும் நேற்று பொதுவேலைநிறுத்தம் தொடங்கியது.

மேற்குவங்காளத்தில் மோதல்

இதில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வலிமையாக உள்ள மேற்குவங்காளத்தில் கொல்கத்தா உள்பட பல இடங்களில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கொல்கத்தா அருகே பராசாட் என்ற இடத்தில் பள்ளிக்கூட பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவிகள் காயமின்றி தப்பினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேற்குவங்காளத்தில் இடதுசாரி தொழிற்சங்கத்தினருடன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக்கொண்டனர். பல இடங்களில் அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் ரெயில் மறியல்

இதேபோல கேரளாவில் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று அரசு பஸ்கள் இயங்கவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களும் கேரளாவுக்கு வரவில்லை. பஸ்கள் இயங்காததால் ரெயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அதேசமயம் போராட்டக்காரர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் ரெயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக கேரளாவில் நேற்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதுபோலவே ஒடிசா, கர்நாடகா, பீகார், மேகாலயா, மணிப்பூர், ராஜஸ்தான், கோவா, பஞ்சாப், ஜார்கண்ட், சத்தீஷ்கார் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் வந்திருந்தனர். பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. சில தமிழக அரசு பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. மாலை 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டன. பஸ்களும் ஓடத்தொடங்கின.


Next Story