நடுங்குவதை நிறுத்திவிட்டு எனது கேள்விக்கு பதில் அளியுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி


நடுங்குவதை நிறுத்திவிட்டு எனது கேள்விக்கு பதில் அளியுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி
x
தினத்தந்தி 10 Jan 2019 6:59 AM GMT (Updated: 10 Jan 2019 7:03 AM GMT)

நடுங்குவதை நிறுத்திவிட்டு எனது கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது. ரபேல் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமே நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருந்தார். இதனை குறிப்பிட்டுக் காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பாதுகாப்பதற்கு ஒரு பெண் தேவைப்படுகிறார் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “ நாட்டில் முதல் முறையாக  பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக எனது அமைச்சரவையில் செயல்பட்டு வருகிறார். இது பெருமைப்படும் விஷயம். எங்களது பாதுகாப்பு அமைச்சர் எதிர்க்கட்சியினர் அனைவரையும் வாயடைக்க செய்து விட்டார். அவரது  பதிலுக்கு எதிர்க் கேள்வி எழுப்ப முடியாதவர்கள் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஒரு பெண் அமைச்சரை மட்டும் விமர்சிக்கவில்லை. நாட்டின் பெண்கள் சக்தியையே இழிவுபடுத்தியுள்ளனர்” என்று கூறியிருந்தார்

இதற்கு டுவிட்டரில் ராகுல்காந்தி பதில் கூறியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ''மதிப்புக்குரிய மோடிஜி. நம்முடைய கலாச்சாரம் என்பது பெண்களை வீட்டில் இருந்தே மதிக்கத் தொடங்குதில்தான் ஆரம்பிக்கிறது. முதலில் நடுங்குவதை நிறுத்துங்கள். ஆண்மகனாக இருந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும்போது அதனை விமானப்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story