நிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல்காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்


நிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல்காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2019 7:30 AM GMT (Updated: 10 Jan 2019 7:30 AM GMT)

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று பிரித்துப் பேசிய ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல மறுக்கிறார். அவர் ஓடி ஒளிகிறார். 56 அங்குலம் மார்பு கொண்ட தைரியமான காவலாளி என்று மோடி தன்னை வர்ணித்துக் கொண்டார்.

ஆனால், இந்த வி‌ஷயத்தில் பெண்ணான நிர்மலா சீதாராமன் தான் அவரை பாதுகாக்க தேவைப்பட்டார். மோடி நிர்மலா சீதாராமனிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள். என்னால் என்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று அவர் உதவியை கேட்கிறார் என ராகுல்காந்தி பேசினார்.

இதற்கிடையில் நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று குறிப்பிட்டு ராகுல்காந்தி கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டுடன் அவர் விமர்சித்திருப்பதாக பலர் தரப்பில் இருந்தும் குற்றம் சாட்டப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையான கருத்துகளை பலரும் வெளியிட்டனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும் இதை குறிப்பிட்டு அவர் தனது கருத்தை கூறினார்.

பாராளுமன்றத்தில் ரபேல் விமானம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டை நிர்மலா சீதாராமன் உடைத்தெறிந்து உண்மையை வெளிப்படுத்தினார்.

ஒரு பெண் ராணுவ மந்திரியாக இருக்கும் நிலையில் அவரை ராகுல்காந்தி அவமதித்துள்ளார். இது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. ஒட்டுமொத்த பெண் குலத்தையே அவர் அவமதித்து இருக்கிறார். இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டிய காலம் வரும் என கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



Next Story