ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்


ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்  அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்
x
தினத்தந்தி 10 Jan 2019 12:04 PM GMT (Updated: 10 Jan 2019 12:04 PM GMT)

ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெய்பூரில் பேசுகையில், ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தின் போது, 56 அங்குல மார்பு கொண்ட பிரதமர் ஒருமுறை கூட மக்கள் மன்றத்துக்கு (நாடாளுமன்றம்) வரவில்லை. ராணுவ மந்திரியின் உரையை நாங்கள் அடித்து நொறுக்கி விட்டோம். ஆனால் ஒரு பெண்ணிடம் (நிர்மலா சீதாராமன்), தன்னை பாதுகாக்குமாறு 56 அங்குல மார்பு கொண்ட பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்’ என்று தெரிவித்தார். நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய பெண் மந்திரிகள் ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

இதற்கிடையே நிர்மலா சீதாராமன் குறித்த பேச்சு தொடர்பாக ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக பிரதமர் இதுபோன்ற வார்த்தைகளை பிரயோகித்துள்ளார் என கூறியுள்ளது.  பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எதிராக எண்ணமுடியாத நோட்டீஸ்களை மகளிர் ஆணையம் அனுப்பியிருக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால், உண்மைக்கு துணை நின்றால், அவர் மக்களவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா. 

Next Story