ஆந்திரா, மே.வங்கத்தை தொடர்ந்து சத்தீஷ்கரும் சிபிஐக்கு அனுமதி மறுப்பு


ஆந்திரா, மே.வங்கத்தை தொடர்ந்து சத்தீஷ்கரும் சிபிஐக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 2:55 AM GMT (Updated: 11 Jan 2019 2:55 AM GMT)

ஆந்திரா, மே.வங்கத்தை தொடர்ந்து சத்தீஷ்கரும், முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

வழக்கு விசாரணை தொடர்பாக, மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறு இடங்களில் சோதனை அல்லது விசாரணை நடத்த வேண்டுமென்றால்,  சி.பி.ஐ.அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் இதற்காக சிபிஐக்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், சிபிஐ முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்து இருந்தார். 

இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக சத்தீஷ்கர் மாநில அரசு  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதிய விவகாரங்களில் சிபிஐ தனது அதிகார வரம்பை சத்தீஷ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001 ஆம் ஆண்டு அளித்திருந்த ஒப்புதலை மாநில உள்துறை திரும்ப பெற்றுள்ளது.

சிபிஐ தலைவர் தலைவர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்கியதோடு, அவரை தீ அணைப்புத்துறை மற்றும் பொது பாதுகாப்பு, உள்துறை பாதுகாப்புத்துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்த அதேநாளில், சத்தீஷ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி சிபிஐக்கு வழங்கியிருந்த ஒப்புதலை ரத்து செய்துள்ளது. 


Next Story