2019 பாராளுமன்ற தேர்தல்: மாயாவதி -அகிலேஷ் யாதவிடையே தொகுதி உடன்பாடு நாளை கூட்டாக அறிவிப்பு


2019 பாராளுமன்ற தேர்தல்: மாயாவதி -அகிலேஷ் யாதவிடையே தொகுதி உடன்பாடு நாளை கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 5:57 AM GMT (Updated: 11 Jan 2019 6:49 AM GMT)

2019 பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி -அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளது. நாளை இருவரும் கூட்டாக அறிவிக்கிறார்கள்.

புதுடெல்லி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான கூட்டணியை நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக இரு கட்சிகளும் கூட்டணியின் பேச்சுவார்த்தைகளை நடத்தின. அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பெரும் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள  காங்கிரஸ் பின் நின்று இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற  2 தொகுதி இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ்  மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன.

மாயாவதியும் , அகிலேஷ் யாதவும் இணைந்து பங்கு பெறும் பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு சமாஜ்வாதி தேசிய செயலாளர் ராஜேந்திர சவுத்ரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய பொதுச் செயலாளர் எஸ்.சி. மிஸ்ரா ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுத்து உள்ளனர்.

பகுஜன் சமாஜ்  மற்றும் சமாஜ்வாதி  கட்சிகள் தலா  37 இடங்களில்  போட்டியிட போவதாக உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.  மீதமுள்ள ஆறு தொகுதிகள் கூட்டணி கட்சிகளான  ராஷ்டீரிய லோக்தளம் மற்றும் காங்கிரசும் பகிர்ந்து  போட்டியிடும் என தகவல்கள் கூறுகின்றன.

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில்  கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்  பாரதீய  ஜனதா 73 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Next Story