பொங்கல் பரிசு விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்


பொங்கல் பரிசு விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:57 AM GMT (Updated: 11 Jan 2019 11:57 AM GMT)

பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் யாராவது மேல்முறையீடு செய்யலாம் என்பதால், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 பரிசும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் வசதி படைத்தவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க தடை விதித்தனர்.

அதாவது சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஐகோர்ட், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் வழங்க அனுமதி அளித்துள்ளது.  மேலும்,  இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுங்கள் எனவும் சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  இன்று பிற்பகல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பு வாதத்தை கேட்காமல்  உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. 

Next Story