அகிலேஷ்-மாயாவதி கூட்டணி: காங்கிரசின் முடிவு இன்று அறிவிப்பு - தனித்து போட்டியிட திட்டம்?


அகிலேஷ்-மாயாவதி கூட்டணி: காங்கிரசின் முடிவு இன்று அறிவிப்பு - தனித்து போட்டியிட திட்டம்?
x
தினத்தந்தி 12 Jan 2019 10:00 PM GMT (Updated: 12 Jan 2019 9:11 PM GMT)

அகிலேஷ்-மாயாவதி கூட்டணி தொடர்பாக, காங்கிரசின் முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக்கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசரமாக நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பப்பர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

முன்னதாக மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. குறிப்பாக குலாம்நபி ஆசாத் பேசும்போது, ‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து நாங்களும் கேள்விப்பட்டோம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை (இன்று) லக்னோவில் அறிவிப்போம்’ என்று மட்டுமே பதிலளித்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.


Next Story