ஸ்திரத்தன்மைக்கா? நிலையற்ற தன்மைக்கா? யாருக்கு ஓட்டு என்பதை வாக்காளர்களே முடிவு செய்யட்டும் - பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்


ஸ்திரத்தன்மைக்கா? நிலையற்ற தன்மைக்கா? யாருக்கு ஓட்டு என்பதை வாக்காளர்களே முடிவு செய்யட்டும் - பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 9:31 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரத்தன்மைக்கா? நிலையற்ற தன்மைக்கா? யாருக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளர்களே முடிவு செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி, 

டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்ற பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு விளக்கினார். அவர் கூறியதாவது:-

1990-ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சி கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபோது சந்திரசேகர், தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால் என 4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை குறுகியகால பிரதமர்களை அறிமுகப்படுத்தியது. மோடி அரசு ஸ்திரத்தன்மையையும், வளர்ச்சியையும் அறிமுகப்படுத்தியது. இந்தியா இப்போது உலகளவில் வளர்ந்துள்ளது, பிரதமரும் உலக தலைவராக உள்ளார்.

ஸ்திரத்தன்மைக்கா? நிலையற்ற தன்மைக்கா?, கவுரவமான, பெருமைக்குரிய தலைவருக்கா? தலைவர் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணிக்கா?, வலிமையான அரசுக்கா? உதவியற்ற அரசுக்கா? யாருக்கு வாக்களிப்பது என்பதை இந்திய வாக்காளர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு கலவையான உணர்வுகளை கொடுத்துள்ளது. இதில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் நல்ல பாடம் கற்றுள்ளனர். இந்த தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தொண்டர்களை புத்துணர்வுடனும், இன்னும் வேகமாகவும் பணியாற்ற தூண்டியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ‘நகைப்புக்குரிய கூட்டணி’. நம்பிக்கையற்ற, முரண்பாடான, சந்தர்ப்பவாத கூட்டணி. பிரதமர் பதவியை கைப்பற்றுவதற்காகவே உருவான அரசியல் கூட்டணி. இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் அவர்களிடம் எந்த கொள்கையும் இல்லை, கூட்டணிக்கு தலைவரும் இல்லை. நரேந்திர மோடி மீதான வெறுப்பில் மட்டுமே இணைந்துள்ளனர். இதை அவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதா கட்சியையும் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் வருகிற தேர்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்று, இந்தியாவை வல்லரசாக மாற்றும் பிரதமர் மோடியின் நோக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.


Next Story