மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு


மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 9:51 PM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.

புதுடெல்லி, 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த மாதம் 12-ந் தேதி நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக் கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி கர்நாடக அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேகதாது அணை தொடர்பாக கர்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்கியது அணைக்கான அனுமதி அல்ல. சாத்தியக்கூறு அறிக்கைக்கு மட்டுமே பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்து இருக்கிறது. சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப்படும்.

மேலும் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு அணுகும். வெறும் அனுமானங்களின் அடிப்படையிலேயே தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளது. தமிழக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளது.

அந்த மனுவில், “மத்திய நீர் வள ஆணையத்துக்கும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் ஒரே தலைவராக மசூத் உசைன் இருப்பதால், அவரால் தனித்துவமாக செயல்பட முடியவில்லை. காவிரியில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் முதற் கட்ட ஆய்வறிக்கைக்கு அவர் அனுமதி அளித்து இருப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. அவரால் நடு நிலையாக செயல்பட முடியாது என்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தனியாக ஒரு தலைவரை நியமிக்க வேண்டும்” என்று கூறி உள்ளது.

இந்த மனுவுக்கும் மத்திய அரசு ஒரு பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறது. அந்த மனுவில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தனியாக தலைவரை நியமிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.


Next Story