ஒடிசாவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற 8-ம் வகுப்பு மாணவி


ஒடிசாவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற 8-ம் வகுப்பு மாணவி
x
தினத்தந்தி 13 Jan 2019 8:45 PM GMT (Updated: 13 Jan 2019 7:46 PM GMT)

ஒடிசாவில் பள்ளி விடுதியில், 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புல்பானி,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடி என்னும் இடத்தில் மாநில பழங்குடியினர் மற்றும் கிராம மேம்பாட்டு இலாகாவின் சார்பில் உயர் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியின் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து விடுதி நிர்வாகிகள் அந்த மாணவியை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவியின் உடல் நிலை சீராக இருப்பதாக கந்தமால் மாவட்ட நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுதியின் 2 தாதி, 2 சமையலர்கள், பெண் மேற்பார்வையாளர், உதவி நர்சு ஆகிய 6 பேரை பணியில் இருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story