காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம்: மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திடீர் மறுப்பு


காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம்: மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திடீர் மறுப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 8:38 PM GMT)

காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் தொடர்பாக, மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திடீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லண்டனை தலைமையிடமாக கொண்டு காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்-உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. கடந்த மாதம் அவரின் சம்மதத்தை கேட்ட பின்பு மத்திய அரசு இந்த சிபாரிசை மேற்கொண்டது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு அளித்த சம்மதத்தை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த மாதம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் நீதிபதி சிக்ரி தனது ஒப்புதலை தெரிவித்தார். ஆனால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இந்த தீர்ப்பாயத்தில் பங்கேற்கவேண்டி இருக்கும் என்பதால் தற்போது நீதிபதி தனது விருப்பத்தை திரும்ப பெறுகிறார்” என்றும் தெரிவித்தன.

நீதிபதி ஏ.கே.சிக்ரி, சுப்ரீம் கோர்ட்டின் 2-வது மூத்த நீதிபதி என்பதும், வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story