உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி - காங்கிரஸ் அறிவிப்பு


உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி - காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 11:30 PM GMT (Updated: 13 Jan 2019 9:12 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள (80 தொகுதிகள்) உத்தரபிரதேசத்தில் வெற்றிக் கனியை பறிக்கும் கட்சியே பெரும்பாலும் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை காணப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் 71 தொகுதிகளில் வென்றது.

இதனால் இந்த முறை அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை சுதாரித்துக் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் நேற்று முன்தினம் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்தனர். மேலும் இரு கட்சிகளும் மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்தன. சோனியா காந்தி, ராகுல்காந்தி வழக்கமாக போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தாலும் 2 தொகுதிக்கு மேல் தரமாட்டோம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதுபோல் இது இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். அத்தனை தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம். 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை விட இந்த முறை காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைக்கும்” என்றார்.

எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பா.ஜனதாவை எதிர்க்கும் எந்த மதசார்பற்ற கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம். இதற்காக காங்கிரசின் கதவுகள் திறந்தே இருக்கிறது. அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் நிச்சயம் அதற்கேற்ப தொகுதிகள் ஒதுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அமையும் கூட்டணியில் காங்கிரசும் இடம் பெறவே விரும்பியது. ஆனால், சிலர் எங்களுடன் கைகோர்த்து நடக்க விரும்பவில்லை. அதனால் ஒன்றும் ஆகிவிடாது” என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்றபோது, “அனைத்து மாநில மதசார்பற்ற பிராந்திய கட்சிகளையும் காங்கிரஸ் வரவேற்கிறது” என்று குலாம்நபி ஆசாத் கூறினார்.


Next Story