காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர்: கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார்


காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர்: கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார்
x
தினத்தந்தி 14 Jan 2019 5:45 AM GMT (Updated: 14 Jan 2019 5:45 AM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர் என்று கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். எனினும், 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க 2-வது முறையாக தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி, மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகிய 3 பேரும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 16-ந் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் 12 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கணேஷ் ஹூக்கேரி தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த் சிங், நாகேந்திரா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆட்சியை கவிழ்க்க ”ஆபரேஷன் தாமரை” என்ற பெயரில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவது உண்மைதான் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மந்திரியுமான டிகே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தலைவர்கள் கட்டுப்பாட்டில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாகவும், கர்நாடகாவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story