ஒடிசாவில் பிரதமர் மோடி தலைமையில் ரூ.1,550 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்


ஒடிசாவில் பிரதமர் மோடி தலைமையில் ரூ.1,550 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
x

ஒடிசாவில் ரூ.1,550 கோடியிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

பலாங்கீர்,

ஒடிசாவில் ஜர்சுகுடா-விஜயநகரம் மற்றும் சம்பல்பூர்-அங்குல் ஆகிய பகுதிகளில் அமைந்த வழித்தடங்களை மின்சார ரெயில் வழித்தடங்களாக மாற்றி அதனை நாட்டுக்கு இன்று பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார்.  இதன் மதிப்பு ரூ.1,085 கோடி.  மொத்த தொலைவு 813 கி.மீட்டர் ஆகும்.

இதேபோன்று 14.2 கி.மீட்டர் தொலைவுள்ள பர்பாலி-துங்கரிபாலி மற்றும் 17.354 கி.மீட்டர் தொலைவுள்ள பலாங்கீர்-தியோகாவன் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான ரூ.189.3 கோடி மதிப்பில் பணி முடிவடைந்த இரட்டை வழித்தடங்களுக்கான ரெயில்வே திட்டத்தினையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

ஜர்சுகுடா பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான லாஜிஸ்டிக்ஸ் பூங்காவையும் நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.  15 கி.மீட்டர் நீளமுள்ள ரூ.115 கோடி மதிப்பிலான பலாங்கீர்-பிச்சுபாலி ரெயில்வே வழி தடமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதேபோன்று பலாங்கிர்-பிச்சுபாலி வழித்தடத்தில் புதிய ரெயில் ஒன்றையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.  இது இந்த பகுதி மக்களுக்கு பயனளிக்கும்.  இதனுடன், பிச்சுபாலி முதல் ஜர்சுகுடா மற்றும் விஜயநகரம் முக்கிய வழித்தடம் வழியாக பலாங்கீர் செல்லும் பகுதியையும் இந்த வழித்தடம் இணைக்கும்.

தெருவலி மற்றும் சிங்காபூர் சாலை ஸ்டேசன் பகுதிகளுக்கு இடையே ரூ.27.4 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் ஒன்றும் தொடங்கி வைக்கப்பட்டது.  கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் நாகவலி ஆற்றின் மீது இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இந்த பாலம் இந்த பகுதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவை தவிர்த்து, பவுத் பகுதியில் உள்ள நீலமாதவ் மற்றும் சித்தேஸ்வர் கோவில் மற்றும் அதே பகுதியில் அமைந்த பச்சிம் சோம்நாத் கோவில்கள் மற்றும் பலாங்கீர் பகுதியில் உள்ள ராணிப்பூர் ஜாரியல் அமைப்பின் நினைவு சின்னங்கள் ஆகியவற்றுக்கான புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகளையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.

இதேபோன்று ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பூரி, புல்பானி, பர்கார் மற்றும் பலாங்கீர் ஆகிய 6 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.  ரூ.15.81 கோடி மதிப்பிலான கேந்திரிய வித்யாலயாவுக்கான நிரந்தர கட்டிடம் ஒன்றிற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார்.

Next Story