எனது அரசு நிலையாக உள்ளது; கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி


எனது அரசு நிலையாக உள்ளது; கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி
x
தினத்தந்தி 15 Jan 2019 1:48 PM GMT (Updated: 15 Jan 2019 1:48 PM GMT)

சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் எனது அரசு நிலையாக உள்ளது என கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவை சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டசபையில் மெஜாரிட்டியை அவரால் நிரூபிக்க முடியவில்லை.  இதனால் அவர் பதவி விலகினார். இதனை அடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இன்று வாபஸ் பெர்றுள்ளனர்.  எச் நாகேஷ் மற்றும் ஆர். சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்,ஏ.க்கள் கவர்னர்ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக கூறி உள்ளனர்.

இதுபற்றி சங்கர் கூறும்பொழுது, இன்று மகர சங்கராந்தி.  இந்த நாளில் அரசில் ஒரு மாற்றம் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  அரசு திறமையுடன் இருக்க வேண்டும்.  அதனால் எனது ஆதரவை (கர்நாடக அரசுக்கு அளித்து வந்த) இன்று வாபஸ் பெறுகிறேன் என கூறியுள்ளார்.

இதேபோன்று நாகேஷ் கூறும்பொழுது, கூட்டணி அரசுக்கான எனது ஆதரவு என்பது நல்ல மற்றும் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக.  ஆனால் இது முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.  கூட்டணியினரிடையே புரிதல் இல்லை.  அதனால் நிலையான ஆட்சி அமைய பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.  அந்த அரசு கூட்டணி அரசை விட சிறப்புடன் செயல்படும் என கூறியுள்ளார்.

இந்த வாபஸ் அறிவிப்புக்கு பின்னர் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றால் என்ன என கூறிய அவர், என்னுடைய வலிமை எனக்கு தெரியும்.  எனது அரசு நிலையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Next Story