சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு


சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு
x
தினத்தந்தி 17 Jan 2019 12:15 PM GMT (Updated: 17 Jan 2019 12:15 PM GMT)

சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

அமராவதி,

2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவு வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர பிரதேச எதிர்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியது கூட்டணி குறித்தான கேள்வியை எழுப்பியுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமராவதியில் உள்ள தெலுங்குதேசம் தொண்டர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியதை விமர்சனம் செய்தார். 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் உண்மை நிலை இப்போது வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மோடியின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வருகிறார்கள். மூன்றாவது கூட்டணி என்பதற்கு பின்னால் பிரதமர் மோடியின் மூளை வேலை செய்கிறது, ஆந்திராவில் பா.ஜனதாவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் மூன்றாவது கூட்டணிக்கு பிற கட்சிகளிடம் இருந்து வெளிப்படையான, ஸ்திரமான பதில் கிடைத்துள்ளது என கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

Next Story