பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு


பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 1:20 PM GMT (Updated: 17 Jan 2019 1:20 PM GMT)

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அரியானா மாநிலத்தில் ‘பூரா சச்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் ராம்சந்தர் சத்ரபதி. 2002-ம் ஆண்டு மே மாதம் அவர் தனது பத்திரிகையில், சிர்சாவில் உள்ள ஆன்மிகவாதி குர்மீத் ராம் ரஹிம் சிங் நடத்திவரும் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பான ஒரு மர்ம கடிதத்தை வெளியிட்டார்.

அதன்பின்னர் அக்டோபர் 24-ந்தேதி சத்ரபதியை அவரது வீட்டின் அருகே குர்தீப் சிங், நிர்மல் சிங் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டனர். அந்த துப்பாக்கி கிரிஷன்லால் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த சத்ரபதி பின்னர் இறந்தார். இதுதொடர்பாக குல்தீப்சிங், நிர்மல் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2003-ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கோர்ட்டு உத்தரவுப்படி 2006-ம் ஆண்டு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சி.பி.ஐ. இந்த வழக்கில் ஆசிரம தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கையும் குற்றவாளியாக சேர்த்தது. இந்த வழக்கு விசாரணை பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீப்சிங், குர்மீத் ராம் ரஹிம் சிங், குல்தீப்சிங், நிர்மல்சிங், கிரிஷன்லால் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதன்படி தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.  சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.  

51 வயதாகும் குர்மீத் ராம் ரஹிம் தனது சீடர்களான 2 பெண்களை கற்பழித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story