‘ஒருங்கிணைந்த இந்தியா’ கூட்டம், பா.ஜனதாவின் எதிர்காலம் குறித்து மம்தாவின் கணிப்பு


‘ஒருங்கிணைந்த இந்தியா’ கூட்டம், பா.ஜனதாவின் எதிர்காலம் குறித்து மம்தாவின் கணிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 2:54 PM GMT (Updated: 17 Jan 2019 2:54 PM GMT)

கொல்கத்தாவில் நாளை மறுநாள் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறவுள்ளது.

2019 தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று பிற எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதில் ஒருமித்த கருத்து தென்படவில்லை. உ.பி.யில் காங்கிரசை கழற்றிவிட்டு சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை அறிவித்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் அதே நிலைதான் ஏற்படும் என பார்க்கப்படுகிறது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் நிற்கும் என தெரிகிறது.  இந்நிலையில்  கொல்கத்தாவில் நாளை மறுநாள் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறவுள்ளது. 

கூட்டத்தில் ஸ்டாலின், கெஜ்ரிவால், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொள்ளப்போவது இல்லை. மாயாவதியும் கலந்து கொள்ளவில்லை. அவருடைய கட்சியின் பிரதிநிதி அனுப்பி வைக்கப்படுகிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜனதா முடிவு எப்படியாக இருக்கும் என கூறியுள்ளார். 

 “பா.ஜனதா 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரசை பற்றி தெரியவில்லை. பிராந்திய கட்சிகள் முடிவு எடுப்பதாக இருக்கும். பிராந்திய கட்சிகள் இரு கட்சிகளைவிடவும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்,” என கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லாதது தொடர்பான கேள்விக்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், “கவலை வேண்டாம், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வரைமுறையிருக்கும்.  ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். மெகா கூட்டணி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டணியாக இருக்கும்,” என கூறியுள்ளார். 


Next Story