ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்


ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jan 2019 11:30 PM GMT (Updated: 18 Jan 2019 10:58 PM GMT)

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

புதுடெல்லி, 

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் 2 வழிகளில் நாட்டுக்கு தவறு இழைத்துள்ளது. ஒன்று, 90 ரபேல் போர் விமானங்கள் வேண்டும் என்ற இந்திய விமானப்படையின் கோரிக்கையை நிராகரித்ததன் மூலம் தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டது. மற்றொன்று, ஒரு விமானத்துக்கு கூடுதலாக ரூ.186 கோடி வழங்க முடிவு செய்தது.

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டதன் அரசியல்சாசனப்படி காங்கிரஸ் மீண்டும் இதனை வலியுறுத்துகிறது. இந்த முடிவு கோர்ட்டு விசாரணைக்கு ஏதுவானது அல்ல, ஆனால் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உரியது.

ரபேல் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் எதிர்பாராத இந்த பரிசு, பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் திட்டமிட்ட முடிவு. இது மிகவும் கேள்விக்குரியது. ராணுவ தளவாட ஒப்பந்தத்தில் இதுபோன்ற ஒரு முடிவு எந்த ஆட்சியிலும் இதுவரை நடந்தது இல்லை.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவுகான் கூறியதாவது:–

2015–ம் ஆண்டு ஏப்ரல் 10–ந் தேதி பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் பற்றி அறிவித்தும், முதல் போர் விமானம் 2019–ம் ஆண்டு இறுதியில் வரும் என்று கூறுவது ஏன்? எகிப்து தனது முதல் ரபேல் விமானத்தை 6 மாதங்களில் பெறும்போது, ஏன் இந்தியாவால் முடியவில்லை?

முதலில் 126 போர் விமானங்கள் வாங்க ஒப்புக்கொண்ட நிலையில், 36 விமானங்கள் மட்டும் பிரான்ஸ் நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம் செய்தது ஏன்? நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியபடி ஒரு விமானத்தின் விலை 9 சதவீதம் குறைவு என்றால், ஏன் 126 விமானங்களையும் பிரான்ஸ் நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம் செய்யவில்லை? மத்திய அரசின் இந்த அவசர முடிவுகள் குறித்து நிச்சயம் விவாதம் தேவை.

இவ்வாறு பிரிதிவிராஜ் சவுகான் கூறியுள்ளார்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ‘‘ஒரு போர் விமானத்துக்கு 41.42 சதவீதம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவது ஏன் என்பதற்கு பிரதமர் எப்போது பதில் அளிப்பார்?’’ என்று டுவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story