வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை


வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2019 8:47 AM GMT (Updated: 19 Jan 2019 8:47 AM GMT)

வழக்கை வாபஸ் பெறாததால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குர்கான்,

அரியானா மாநிலம் கர்னால் பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்தீப் குமார் என்ற நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்தப்புகாரின் பேரில் பவுன்சராக இருக்கும் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் குமார் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு குர்கானில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது தனது வாக்குமூலத்தை அளிக்க பாதிக்கப்பட்ட பெண்  குர்கான் வருகை தந்தார். பின்னர் வாக்குமூலத்தை அளித்துவிட்டு அந்த பெண் வீடு திரும்பினார். இந்த நிலையில், நதுப்பூரில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு வந்த சந்திப்குமார், வலுக்கட்டாயமாக பெண்ணை வெளியே இழுத்துச் சென்றதுடன், தனக்கு எதிராக தொடுத்த வழக்கை திரும்பப்பெறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெற அழுத்தம் கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வழக்கை வாபஸ் பெற மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், கோபத்தில் சந்தீப் குமார், அப்பெண்ணை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் அப்பெண் உயிரிழந்து விட்டார். பாதிக்கப்பட்ட பெண் கிளப் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அந்த கிளப்பில் பவுன்சராக சந்தீப் குமார் பணியாற்றியுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story