கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து


கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 20 Jan 2019 7:31 AM GMT (Updated: 20 Jan 2019 7:31 AM GMT)

கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கரிஹட் என்ற இடத்தில் ஐந்து மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின்  தரை தளம் மற்றும் முதல் தளத்தில், துணிக்கடை ஒன்றின் குடோன் உள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. 

இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரெனெ இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதையடுத்து, தீ அணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 16 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தும் ஏற்பட்டதும் குடியிருப்புகளில் இருந்த மக்கள் அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். 

தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. எனினும்,  குடோனில் இருந்து சரக்குகள் தீக்கிரையாகின. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story