பெங்களூருவில் கடத்தி விற்பனை: ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை வாங்கிய தூத்துக்குடி தாசில்தார் மனைவியுடன் கைது - மேலும் 3 பேரும் சிக்கினர்


பெங்களூருவில் கடத்தி விற்பனை: ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை வாங்கிய தூத்துக்குடி தாசில்தார் மனைவியுடன் கைது - மேலும் 3 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Jan 2019 9:45 PM GMT (Updated: 20 Jan 2019 7:15 PM GMT)

பெங்களூருவில் கடத்தி விற்பனை செய்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய தூத்துக்குடி தாசில்தார் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூருவில் 11 மாத பெண் குழந்தையை கடத்தி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை வாங்கிய தூத்துக்குடி தாசில்தார், மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவை சேர்ந்த சந்தன்குமார்-ராணி என்ற தம்பதிக்கு அர்னாபீ குமாரி சிங் என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. ராணி தனது வீட்டை காலிசெய்து இன்னொரு வீட்டில் குடியேற முடிவு செய்தார். கடந்த 16-ந் தேதி இரவு 8 மணியளவில் குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது ராணி தனது வீட்டில் உள்ள பொருட்களை புதிதாக குடியேற உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்தபோது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் ராணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கடத்தி விற்ற 3 பேரையும், அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கிய தமிழக தம்பதியையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கைதானவர்கள் பெங்களூருவை சேர்ந்த அன்புகுமார் (வயது 43), மஞ்சுநாத் (19), யோகேஷ்குமார் (21) மற்றும் குழந்தையை வாங்கிய தூத்துக்குடியை சேர்ந்தவரும், ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருமான தாமஸ் பயாஸ் (55), அவருடைய மனைவி அருணா பயாஸ் (45) என்பது தெரியவந்தது.

அன்புகுமார், மஞ்சுநாத், யோகேஷ்குமார் 3 பேரும் திட்டமிட்டு குழந்தையை கடத்தி தூத்துக்குடி தாசில்தாருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

குழந்தையை வாங்கிய தாசில்தார் தாமஸ் பயாஸ் மனைவியுடன் வாடகை காரில் தூத்துக்குடிக்கு சென்றபோது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலீசார் விரட்டிச்சென்று அவர்களை மடக்கிப்பிடித்து குழந்தையை மீட்டனர். கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story