பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான்’ - விசாரணை அறிக்கையில் அம்பலம்


பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான்’ - விசாரணை அறிக்கையில் அம்பலம்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 8:10 PM GMT)

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று விசாரணை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அந்த சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது சசிகலாவுக்கு சட்ட விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அப்போதைய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு அறிக்கை அனுப்பினார். மேலும் அவர் தகவல்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தினார். இதைதொடர்ந்து ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவர் கர்நாடக ஊர்க்காவல் படை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே இந்த சிறை முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என்று கூறி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பெண் போலீஸ் அதிகாரி ரூபா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து, விசாரணை அறிக்கை நகலை பெற்றுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு கூடுதலாக 4 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. சமையல் கூடம் ஒன்றும் ஒதுக்கப்பட்டு இருந்தது. யாருக்கும் தெரியாத வகையில், பூனைகள் உள்ளே வராத வகையில் அறைகள் திரைசீலைகளால் மறைக்கப்பட்டு இருந்தன. மேலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்டு இருந்தன.

சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக டி.ஐ.ஜி. ரூபா புகைப்பட ஆதாரங்களை வழங்கினார். நாங்கள் ஆய்வு செய்தபோது, சமையல் கூடம் தென்படவில்லை. 5 அறைகளும் மூடப்பட்டு இருந்தன. சமையலுக்கு தேவையான மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் அங்கு இருந்ததை கைப்பற்றினோம்.

சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிறை சீருடையை அணியவில்லை. சாதாரண உடையை தான் அணிந்திருந்தனர். நாங்கள் சிறைக்கு சென்று ஆய்வு செய்தபோது, சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தது. டி.ஐ.ஜி. ரூபா 74 ஆதாரங்களை கொடுத்திருந்தார்.

மேலும் சிறையில் பார்வையாளர்களை சந்திக்க சசிகலாவுக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. சசிகலாவை சந்திக்க பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட்டு உத்தரவிடாதபோதும், சசிகலாவுக்கு குளுகுளு வசதி செய்து தரப்பட்டு இருந்தன. சிறையின் முதல் மாடியில் ஒரு அறை சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

நாங்கள் ஆய்வு செய்தபோது, சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே வரிசையில் 4 அறைகள் காலியாக இருந்தது. அது யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சசிகலாவின் பாதுகாப்பு கருதி, அந்த அறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த அறைகளில் ஒரு அறையின் முன்பு புத்தகம் உள்ளிட்ட சில பொருட்கள் இருந்தன. இதை வைத்து பார்க்கும்போது. அந்த 4 அறைகளும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

சிறையில் பெண் கைதிகளுக்கு என்று 28 அறைகள் உள்ளன. அந்த அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சசிகலாவுக்கு அதிக அறைகள் ஒதுக்க வேண்டும் என்பதற்காக, விதிகளுக்கு மாறாக மற்ற அறைகளில் பெண் கைதிகள் அதிக எண்ணிக்கையில் அடைக்கப்பட்டிருந்தனர். சசிகலா, இளவரசி சிறையை விட்டு வெளியே சென்று வந்துள்ளது தொடர்பான வீடியோ காட்சிகள் இருக்கின்றன.

சசிகலா அறையில் குக்கர் இருந்தது. அதுபற்றி கேட்டபோது, சிறை சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் குக்கர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டி.ஐ.ஜி. ரூபா கொடுத்த ஆதாரங்கள் மற்றும் பிற விவரங்களை வைத்து பார்க்கும்போது, சசிகலா, இளவரசிக்கு சிறை அதிகாரிகள் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி ரூபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். அது தான் எனது விருப்பம்.

சிறையில் விதிமுறைகளை மீறி குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பது என்பது தவறானது. இது தடுக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை சட்டப்படி அனுபவிக்க வேண்டும். இவ்வாறு ரூபா கூறினார்.


Next Story