கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்


கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:47 AM GMT (Updated: 21 Jan 2019 5:55 AM GMT)

கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 104 எம்.எல். ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், அவர்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாகவும் தகவல் வெளியானது. இதனால் கூட்டணி ஆட்சி எந்த நேரமும் கவிழ்ந்து விடலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். மேலும் நேற்று முன்தினம் பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா ஆகிய 4 பேர் மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான உமேஷ் ஜாதவ், நாகேந்திரா மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு காரணம் தெரிவித்திருந்தனர். ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனால் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். மேலும் அவர் மும்பையில் முகாமிட்டுள்ளதுடன், பா.ஜனதா தலைவர் களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இதனால் ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எப்போது வேண்டுமானாலும் பா.ஜனதாவில் இணையலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், பெங்களூரில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த  அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஆனந்த் சிங் எம்எல்ஏ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story