மேகதாது அணை விவகாரம்: விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்


மேகதாது அணை விவகாரம்: விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
x

மேகதாது அணை விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரங்கள் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகாவில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்பு, முதல்-மந்திரி குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.  இந்த அணை, குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைக்காக கட்டப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை குமாரசாமி நேரில் சந்தித்து பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து, இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்கு தடை  கோரி தமிழக அரசும், புதுச்சேரி அரசும்  உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசும், மத்திய அரசும் கால அவகாசம் கேட்டதால் விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Next Story