மேற்கு வங்காளத்தில் செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் -அமித்ஷா


மேற்கு வங்காளத்தில் செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் -அமித்ஷா
x
தினத்தந்தி 22 Jan 2019 10:08 AM GMT (Updated: 22 Jan 2019 10:08 AM GMT)

மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடுவோம் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மால்டா,

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரசாரத்தை தொடங்கியுள்ளார். பிரசாரத்தில் அமித்ஷா பேசுகையில் எதிர்க்கட்சிகளையும், மம்தா பானர்ஜியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு தாவிய முகுல் ராய் பேசுகையில், மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காது. திரிணாமுல் காங்கிரஸ் 20 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெற்றால் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து வெளியேறுவேன் என்றார். அமித்ஷா பேசுகையில், அடாவடியான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் தொடருமா என்பதை 2019 தேர்தல்  நிர்ணயம் செய்யும்.

மம்தா பானர்ஜி பா.ஜனதாவின் யாத்திரையை தடுக்கலாம், ஆனால் மக்கள் மத்தியிலிருந்து பா.ஜனதாவை நீக்க முடியாது. யாத்திரைக்கு நீங்கள் (மம்தா பானர்ஜி) அனுமதிக் கொடுக்கவில்லை. இது பெரிய விஷயம் கிடையாது. நாங்கள் கடினமாக உழைப்போம், உங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். பஞ்சாயத்து தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் மக்களை வாக்களிக்கவிடவில்லை. இப்போது அதுநடக்காது. மத்திய தேர்தல் ஆணையம் பணியை கையில் எடுக்கும். மக்கள் வாக்களிக்க பயம் கொள்ள தேவையில்லை. 

மேற்கு வங்காளத்திற்கு மோடி அரசு ரூ. 3.95 கோடியை கொடுத்துள்ளது. மத்திய அரசு வழங்கிய பணத்தில் பாதியை ஊடுருவல்காரர்களும், பாதியை திரிணாமுல் காங்கிரசாரும் விழுங்கிவிட்டனர். என்ஆர்சியால் இந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பசுக்கள் காணாமல் போகாது. திரிணாமுல் காங்கிரசை ஆட்சியைவிட்டு அகற்றினால் சிண்டிகேட் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடவேண்டிய அவசியம் உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அவை மூடப்படும். அரசு நிர்வாகமும் அரசியலாகியுள்ளது. என்னுடைய ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டது, சுயநலமானது என விமர்சனம் செய்தார்.

Next Story