நீரவ் மோடி, சோக்சி மற்றும் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர்; மத்திய மந்திரி ஜவடேகர் பேட்டி


நீரவ் மோடி, சோக்சி மற்றும் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர்; மத்திய மந்திரி ஜவடேகர் பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2019 10:16 AM GMT (Updated: 22 Jan 2019 10:16 AM GMT)

இடைத்தரகர் மிசெல் போல் நீரவ் மோடி, சோக்சி மற்றும் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவர் என மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பாரதீய ஜனதா அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.  இதில் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், முந்தைய காங்கிரஸ் அரசு வங்கிகளுக்கு நெருக்கடி அளித்தது.  இதனால் மெகுல் சோக்சி, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோருக்கு உத்தரவாதம் எதுவுமற்ற நிலையில் கடன் வழங்கப்பட்டது. 

காங்கிரஸ் ஆட்சி நடந்தவரை அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடவில்லை.  ஆனால் பிரதமர் மோடி அரசு வந்தபின்னர், அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு தப்பி சென்று விட்டனர் என கூறியுள்ளார்.

இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் நாடு கடத்தப்பட்டது போன்று நீரவ் மோடி, சோக்சி மற்றும் மல்லையா ஆகியோரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர்.  அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்.  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துகள் முடக்கப்படும்.

அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பணமும் அவர்களிடம் இருந்து மீட்கப்படும் என கூறியுள்ளார்.

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த டிசம்பர் 4ந்தேதி நாடு கடத்தப்பட்டார்.

Next Story