2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா? -கரீனா கபூர் பதில்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா? என்ற கேள்விக்கு கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் இந்தி நடிகை கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். போபால் மக்களவைத் தொகுதியில் கரீனா கபூரை போட்டியிட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் கவுடு சவுகான், அனீஸ் கான் பேசுகையில், போபால் தொகுதியில் ஸ்திரமாக காலூன்றியுள்ள பா.ஜனதாவை தோற்கடிக்க கருவியாக இந்நகர்வை முன்னெடுக்கலாம். கரீனா கபூருக்கு இளம் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் கரீனாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்றனர். இதற்கிடையே திரையுலகில் தனக்கான இடத்தில் ஸ்திரமாக இருக்கும் கரீனா கபூர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டி என வந்த தகவலை மறுத்துள்ள கரீனா கபூர் “நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் திரையுலகில் மட்டுமே இருக்கிறது, அது அப்படியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story