பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை


பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2019 2:29 PM GMT (Updated: 22 Jan 2019 2:38 PM GMT)

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு குற்றவாளி மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொச்சி,

கேரளாவில் 46 வயது நிறைந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த வருடம், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ மூலக்கல் தன்னை பலமுறை கற்பழித்து உள்ளார் என பரபரப்பு புகார் கூறினார்.  கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேல் கடந்தும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது விடுதியில் உடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.

இவ்வழக்கில் மூலக்கலுக்கு எதிரான அறிக்கையை அளித்த முக்கிய சாட்சி அப்பாஸ் குரியாகோஸ் கத்துதாரா( வயது 67) பஞ்சாப் ஜலந்தரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இந்த வழக்கில் மூலக்கல் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 5 கன்னியாஸ்திரிகளில் 4 பேரை கேரளாவில் உள்ள கான்வென்ட்டில் இருந்து வெளியேறும்படி சமீபத்தில் அதன் மிஷனெரி தலைமை உத்தரவிட்டது.

இதனை அடுத்து 5வது கன்னியாஸ்திரியான நீனா ரோஸ் மற்றும் பிற கன்னியாஸ்திரிகள் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினர்.  இதில் ரோஸ், என்னை தனிமைப்படுத்தி, துன்புறுத்துவது அவர்களின் நோக்கம்.  இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது வாழ்க்கை ஆபத்தில் சிக்கி விடும் என எழுதினார்.

இந்த நிலையில், சமூகத்தின் ஒரு பகுதியாக மற்றும் அன்றாட மத வாழ்க்கையில் இணைந்து செயல்பட ரோஸ் மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி அவரை இடமாறுதல் செய்து மிஷனெரிகளுக்கான ஒருங்கிணைந்த தலைமை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Next Story