நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!


நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!
x
தினத்தந்தி 23 Jan 2019 9:25 AM GMT (Updated: 23 Jan 2019 9:25 AM GMT)

பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. 
காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும்போதெல்லாம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய சுவரொட்டிகள் உத்தரபிரதேசத்தில் அடிக்கடி ஒட்டப்பட்டு வரும். தலைவர்களும் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை மறைமுகமாக முன்வைத்தனர்.

பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த ஆண்டு பதில் அளித்து பேசுகையில், “எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பது தொடர்பாக பிரியங்கா காந்திதான் முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.

அலகாபாத்தில் இந்திராவின் ரத்தம், பிரியங்கா விரைவில் வருகிறார் என போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் இந்திரா காந்தி மற்றும் அவரது பேத்தியான பிரியங்காவின் படங்கள் இடம்பெற்றது.

சமீபத்திய 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் வெற்றிப்பெற்றது. இதில் பிரியங்கா முக்கிய பங்காற்றினார். இதனையடுத்து முதல்-அமைச்சர்கள் தேர்வில் மோதல் நிலவிய போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதற்கிடையே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றியடை செய்ய வேண்டும் என்ற ஸ்திர நோக்கத்துடன் மக்கள் மத்தியில் கள ஆய்வு செய்து திட்டங்களை வகுக்கும் 100 செயல்திட்டம் ஒன்று அவர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் வெளியாகியது.

இதற்கிடையே 2019 பாராளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிகழ்வாக காங்கிரசில் முதல் முறையாக பிரியங்காவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்  உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அறிவித்து உள்ளது. இதுவரையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். இப்போது  உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் வேண்டுமென்றால் அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியிடுங்கள் என்று கூறி காங்கிரசை, சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதால், பிரியங்காவின் அரசியல் பிரவேசம் அங்கு தொடங்குகிறது. தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

Next Story