ஆணவ கொலை; 18 வருடத்திற்கு பின் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்


ஆணவ கொலை; 18 வருடத்திற்கு பின் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்
x
தினத்தந்தி 24 Jan 2019 10:25 AM GMT (Updated: 24 Jan 2019 10:25 AM GMT)

ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகளான தாய், மாமா 18 வருடத்திற்கு பின் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

சண்டிகார்,

கனடா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஜஸ்வீந்தர் கவுர் சித்து.  ஜஸ்சி என அழைக்கப்பட்ட இவர் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.  ஜஸ்சி, பஞ்சாபிற்கு வந்தபொழுது சுக்வீந்தர் சிங் மித்து என்பவரை காதலித்துள்ளார்.  மித்து ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார்.

இவர்கள் இருவரது காதலுக்கு ஜஸ்சியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 1999ம் ஆண்டு கடும் எதிர்ப்பினை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  அப்பொழுது ஜஸ்சிக்கு 25 வயது.  இதனை அடுத்து 2000ம் ஆண்டு இருவரும் கூலிப்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

அவர்களை ஜஸ்சியின் தாய் மற்றும் மாமா வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.  இதில், ஜஸ்சியை கொடூர கொலை செய்தபின் அவரது உடலை சாக்கடையில் வீசி விட்டு சென்றனர்.  மித்துவை கடுமையாக தாக்கி பின் அங்கேயே விட்டு சென்றனர்.  ஆனால் மித்து உயிர் பிழைத்து விட்டார்.

இதுபற்றி பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  ஜஸ்சியின் தாய் மல்கித் சித்து மற்றும் மாமா சுர்ஜித் பதேசா ஆகியோர் மீது ஜஸ்சியை கொலை செய்ய திட்டமிட்டனர் என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு 2 குற்றவாளிகளையும் நாடு கடத்தும்படி கனடா அதிகாரிகளிடம் இந்திய போலீசார் கேட்டு கொண்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் 2016ம் ஆண்டு இவர்களை நாடு கடத்த கனடா கோர்ட்டு தடை விதித்தது.  2017ம் ஆண்டு அவர்களை நாடு கடத்த கனடா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  ஆனால் தீர்ப்பினை மறுஆய்வு செய்ய குற்றவாளிகள் கோரினர்.  இதனால் நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இறுதியில் 2018 டிசம்பரில் கனடா நீதிமன்றம் ஒன்று இவர்களை நாடு கடத்த உத்தரவிட்டது.  அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் பஞ்சாப் போலீசாரிடம் இன்று ஒப்படைக்கப்படுவர்.  இதன்பின் சங்குரூர் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர்.

Next Story