இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு


இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 25 Jan 2019 2:20 AM GMT (Updated: 25 Jan 2019 2:20 AM GMT)

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் நேற்று இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியவற்றை சுமந்தபடி விண்ணில்  பாய்ந்தது. 

பூமியில் இருந்து 274.12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோளும், 450 கிலோ மீட்டர் தூரத்தில் ‘கலாம் சாட்’ செயற்கை கோளும் நிலைநிறுத்தப்பட்டன. ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கை கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

2 செயற்கைக்கோள்களும் வெற்றிகமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிஎஸ்எல்வி மூலம் 2019-ஆம் ஆண்டில் முதல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதாகவும், இந்த வருடம் 32 ராக்கெட்களை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பாராட்டு

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பிரதமர் மோடி இந்த பாராட்டுச்செய்தியை வெளியிட்டுள்ளார். மோடி கூறியிருப்பதாவது:-  திறமை வாய்ந்த இந்திய மாணவர்களின் கலாம்-சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புவிசுற்றுவட்டப்பாதையில் 4வது நிலையை பயன்படுத்தி செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா” என தெரிவித்துள்ளார். 

Next Story