முன்னாள் மத்திய மந்திரி பெர்னாண்டஸ் மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இரங்கல்
முன்னாள் மத்திய மந்திரி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு வயது 88. வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ராணுவ மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
இது தவிர்த்து தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சமதா கட்சியை தோற்றுவித்ததுடன், ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தவர்.
இந்த நிலையில், நீண்ட காலம் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பெர்னாண்டஸ், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இன்று மரணம் அடைந்துள்ளார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் நாடாளுமன்றவாதி மற்றும் மத்திய மந்திரியான பெர்னாண்டஸ் மறைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இந்நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என முகநூலில் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி ரந்தீப் சுர்ஜீவாலாவும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் ராணுவ மந்திரி, சிறந்த வர்த்தக அமைப்பு தலைவரான பெர்னாண்டஸ் மறைவடைந்தது வருத்தம் தருகிறது. பல ஆண்டுகளாக அவரை நான் அறிவேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story