பெங்களூருவில் மிரேஜ் 2000 விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு


பெங்களூருவில் மிரேஜ் 2000 விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 9:06 AM GMT (Updated: 1 Feb 2019 10:51 AM GMT)

பெங்களூருவில் மிரேஜ் 2000 விமானப்படை விமானம் விபத்துக்குள் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் விமான நிலையத்தில் இன்று காலை பயிற்சி விமானமான மிரேஜ் 2000  விபத்துக்குள்ளானது. விமானம் விபத்தில் சிக்கிய போது உடனடியாக விமானிகள் இருவரும் வெளியே குதித்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் தீப்பற்றிக்கொண்டது என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் பொது தொலை தொடர்புத்துறை அதிகாரி பேசுகையில், “இன்று காலை எச்.ஏ.எல். விமான நிலையத்தில் மிரேஜ் 2000 விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது. விமானத்தை அப்-கிரேடு செய்த பின்னர் விபத்து சம்பவம் நடந்துள்ளது,” என தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்ட இரு விமானிகளும் உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல் உடனடியாக வெளியாகவில்லை. விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்னவென்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

உயிரிழந்தவர்கள் ஸ்க்ரூட்ரான் தலைவர் சமிர் அப்ரோல் மற்றும் சித்தார்த்தா நேகி என தெரியவந்துள்ளது. இருவரும் தொழில்நுட்பம் மற்றும் சோதனைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானியின் உடல் முழுவதுமாக எரிந்துவிட்டது, மற்றொரு விமானி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது உயிரிழந்துவிட்டார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேசுகையில், விமானம் தரையில் மோதி வெடித்து தீப்பிடித்து எரிந்தது என தெரிவித்துள்ளனர். விமானம் விபத்தில் சிக்கியதும் விமானிகளை வெளியே கொண்டுவர தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். 

Next Story