கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தர்ணா - தலைவர்கள் ஆதரவு


கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தர்ணா - தலைவர்கள் ஆதரவு
x
தினத்தந்தி 3 Feb 2019 5:46 PM GMT (Updated: 3 Feb 2019 5:54 PM GMT)

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #Kolkatta #MamataBanerjee

கொல்கத்தா,

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்திற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“கொல்கத்தாவில் நடக்கும் விவகாரங்கள் கண்டனத்திற்குரியவை; அரசியலமைப்பை பாதுகாக்க மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் பக்கம் துணை நிற்போம்” என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

“கொல்கத்தாவில் மாநகர காவல் ஆணையர் வீட்டிற்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள் குழுவை போலீஸ் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் பேசினேன்; பிரதமர் மோடி, அமித்ஷாவின் நடவடிக்கைகள் வினோதமாகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் உள்ளது” என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியில், அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி பறிபோவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

“பா.ஜனதா நேர்மையற்ற வழியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது சி.பி.ஐ தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயக விரோதமானது. அரசியலமைப்பு மாண்பிற்கு எதிரானது” என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.



Next Story