காந்தி உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்


காந்தி உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2019 9:15 PM GMT (Updated: 3 Feb 2019 9:00 PM GMT)

காந்தி உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் நினைவு நாளான கடந்த 30-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இந்து மகாசபை அமைப்பை சேர்ந்த சிலர் காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டும், தீ வைத்தும் எரித்தனர். நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பினார்கள். இதில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இன்று(திங்கட்கிழமை) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ‘இந்து மகா சபை அமைப்பை கண்டித்து நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தியின் சிலை அருகிலும், காந்தி தொடர்பான இடங்களிலும் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும்’ என்றார்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story