நிதி மோசடி வழக்கு ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 4 மணி நேரம் விசாரணை
நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 4 மணி நேரம் விசாரணை நடத்தியது.
புதுடெல்லி,
நிதி மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா நேற்று ஆஜரானார். அவரை பிரியங்கா காரில் கொண்டுவந்துவிட்டார். ராபர்ட் வதேரா இங்கிலாந்தில் ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.17 கோடி மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வதேரா குற்றம் சாட்டினார்.
இதில் ராபர்ட் வதேரா முன்ஜாமீன் கோரிய போது, வதேராவை கைது செய்ய 16–ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைக்கு வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், 6–ந் தேதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன்படி நேற்று டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராபர்ட் வதேரா வந்தார். அவருடன் மனைவி பிரியங்காவும் ஒரே காரில் வந்தார். எனினும் வதேராவை அங்கு இறக்கி விட்டுவிட்டு சிறிது நேரத்தில் பிரியங்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் 4 மணி நேரங்கள் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவிடம் விசாரணையை மேற்கொண்டது.
ராபர்ட் வதேராவை பிரியங்காவே காரில் கொண்டுவந்துவிட்டு சென்றது அரசியல் எதிரிகளுக்கு கொடுக்கப்பட்ட பதிலாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story