டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை முடிந்தது: இரட்டை இலை சின்னம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு


டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை முடிந்தது: இரட்டை இலை சின்னம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2019 10:45 PM GMT (Updated: 8 Feb 2019 9:42 PM GMT)

டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் மற்றும் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் தங்கள் இறுதி சுற்று வாதங்களை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு எழுத்துபூர்வ வாதங்களை வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் குக்கர் சின்னம் கோரும் வழக்கின் மீது நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story