தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்


தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:55 AM GMT (Updated: 10 Feb 2019 10:55 AM GMT)

2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள கை கோவிலை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள இமூர் பகவதி அம்மன் கோவிலில் 2 கைகள்தான் சிலையாக உள்ளது. இவை இந்து கடவுள் பார்வதியின் கைகள் என நம்பப்படுகிறது. பார்வதியின் ஒரு கை அச்சமின்மையையும், மற்றொரு கை எந்தப் பிரச்சினையிலிருந்தும் மீள முடியும் என்ற திறனையும் வெளிப்படுத்துகிறது என கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு வந்தபின்னர் தான் இந்திரா காந்தி தன்னுடைய கட்சிக்கு கை சின்னத்தை தேர்வு செய்தார் எனவும் கூறப்படுகிறது.

1975-77 அவசரநிலை முடிவுக்கு பின்னர் நடந்த மக்களவை தேர்தலில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சியின் பசுவும் கன்றுக்குட்டியும் அடங்கிய சின்னமும் பறிபோனது. பின்னர் சைக்கிள் அல்லது யானை சின்னம் என்ற நிலையில் இந்திரா காந்தி கை சின்னத்தை தேர்வு செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. அப்போது இந்தக் கோவிலை பற்றி கேள்விப்பட்ட இந்திரா காந்தி, அங்கிருந்த சிலையின் 2 கைகளில் ஒரு கையை தனது கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்தார். அந்த சின்னம்தான் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.

இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதை அடுத்து இந்திரா காந்தி கோவிலுக்கு பெரிய மணியொன்றை நேர்த்திக்கடனாக செலுத்தினார் எனவும் கோவில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு செல்லுவதால் கோரிக்கை நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. அரசியல்வாதிகளும் தேர்தல் நடைபெறும் போது எல்லாம் இங்கு செல்கிறார்கள். 2019 தேர்தல் வரையுள்ள நிலையில் காங்கிரஸ், பா.ஜனதா என அனைத்து கட்சியினரும் அங்கு செல்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டியும், வெற்றி பெற வேண்டியும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக உள்ளது.

பகவதி அம்மனின் ஆசி வேண்டி கேரளா மட்டுமல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசியல்வாதிகளும் செல்கின்றனர். ராகுல் காந்தியும் இக்கோவிலுக்கு வரவேண்டும் என்பது உள்ளூர் காங்கிரசார் கோரிக்கையாக உள்ளது.


Next Story