ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதுடெல்லி,
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் அவர் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இதன்படி, டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் காலை 8 மணியளவில் உண்ணா விரத போராட்டத்தை துவங்கினார். இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் சந்திரபாபு நாயுடு மரியாதை செலுத்தினார்.
‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாநில மந்திரிகள் மற்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story