விஷ சாராய விவகாரம்: யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
விஷ சாராய விவகாரம் காரணமாக யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மற்றும் குஷிநகர் மாவட்டங்களிலும், உத்தரகாண்டின் ரூர்க்கி மாவட்டத்திலும் விஷ சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் விஷ சாராயத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்துக்கு ஆளும் பா.ஜனதா அரசுகளே காரணம் என பிரியங்கா குற்றம் சாட்டி உள்ளார். பிற அரசியல் கட்சிகளும் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. உ.பி. சட்டசபையில் இவ்விவகாரம் இன்று எழுப்பப்பட்டது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இவ்விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. விஷ சாராய விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இருப்பினும் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story