சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை


சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 Feb 2019 10:59 AM GMT (Updated: 11 Feb 2019 10:59 AM GMT)

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி,

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த வருடம் வெளியேறினார்.

அவர் சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார். ஆனால் இது பலனளிக்காத நிலையில், அடுத்த கட்டமாக ‘தர்ம போராட்ட தீக்‌ஷா’ என்ற பெயரில் டெல்லியில் அவர் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.  இதற்காக அங்குள்ள ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் மாநில மந்திரிகள் மற்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் பங்கேற்கின்றனர். மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் கலந்துகொள்கின்றன. இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்குகின்றன.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் கிந்தலி கிராமத்தினை சேர்ந்த தவல அர்ஜுன் ராவ் என்ற மாற்றுத்திறனாளி சென்றுள்ளார்.

இந்த நிலையில், ஆந்திர பவன் வெளியே சக்கர நாற்காலியில் இறந்த நிலையில் அவரது உடலை போலீசார் இன்று கைப்பற்றினர். அவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  அதனுடன், தெலுங்கில் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டெடுத்தனர்.

அந்த 2 பக்க கடிதத்தில், நிதி நெருக்கடியே இந்த முடிவை எடுக்க காரணம் என அவர் குறிப்பிட்டு உள்ளார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இன்று அதிகாலை அவர் உயிரிழந்து இருக்க கூடும் என்றும், காலை 7 மணியளவில் இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.  அவரது குடும்பத்தினர் டெல்லி வந்தபின்னர் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் கூறினர்.

Next Story