பிரியங்காவிற்கு குவிந்த ஆதரவு, உ.பி.யில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் -ராகுல்காந்தி நம்பிக்கை


பிரியங்காவிற்கு குவிந்த ஆதரவு, உ.பி.யில் காங்கிரஸ் வெற்றிப்பெறும்  -ராகுல்காந்தி நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2019 4:00 PM GMT (Updated: 11 Feb 2019 4:00 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என ராகுல்காந்தி நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

லக்னோ,
  
உத்தரப்பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக சமீபத்தில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பை கையில் எடுத்த பிரியங்கா கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார். 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் பா.ஜனதா கோட்டையான லக்னோவில் பேரணியை நடத்தினார்.  அவருடைய இந்த பிரசாரத்துக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். பிரியங்காவிற்கு வழி நெடுங்கிலும் ஆதரவு காணப்பட்டது. சிலர் பிரியங்கா சேனா என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர்.

இந்திரா காந்தியை பிரியங்காவிடம் பார்க்கிறோம் என்ற கோஷமும் எழுந்தது. தொண்டர்கள் அனைவரும் இதனையே குறிப்பிட்டனர். இதற்கிடையே நடுவில் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று கோஷமிட்டார். உடனே அந்த கூட்டத்தில் இருந்தவர்களும் திருப்பி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பிரதமரை தாக்கி ராகுல் காந்தி பேசினார். தேசத்தின் பாதுகாவலர் உத்தரப்பிரதேச மக்களின் பணத்தையும், இந்திய விமானப் படை பணத்தையும் மற்றும் பலர் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டார். தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்றார்.

உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர்களாக பிரியங்கா மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை நியமித்துள்ளேன். உத்தரப்பிரதேசத்துக்கு நிகழும் அநீதிக்கு எதிராக சண்டையிட அவர்களிடம் தெரிவித்துள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சித்தாந்தம் கொண்ட அரசு அமையும் வரை நாங்கள் (பிரியங்கா,  ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ராகுல்) ஓயமாட்டோம் என்றார். காங்கிரசின் பயணம் உ.பி.யில் தொடங்கிவிட்டது. இனி காங்கிரஸ் இங்கு பலவீனமான கட்சியாக இருக்காது. பிரியங்காவும், ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸை உ.பி.யில் மீண்டும் வலுவாக்குவார்கள் என்றார் ராகுல் காந்தி. இனியும் மாநிலத்தில் பலவீனமாக இருக்க முடியாது என்பதை கோடிட்டு காட்டினார் ராகுல் காந்தி.

Next Story